தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி (Solo Nqweni) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 56,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி (Solo Nqweni) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலும் ஸ்காட்லாந்திலும் கிரிக்கெட் வீரர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது கிரிக்கெட் வீரர், சோலோ.
இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஜிபிஎஸ் என்கிற அரியவகை நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டேன். 10 மாதங்களாக இந்த நோயை விரட்டப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதிதான் மீண்டு வந்திருக்கிறேன். காசநோயும் வந்தது. கல்லீரலும் சிறுநீரகமும் பழுதடைந்துள்ளன. இப்போது, கரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏன் எல்லாமே நடக்கிறது என நிஜமாகவே தெரியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
26 வயது சோலோ, 2012-ல் தென் ஆப்பிரிக்க யு-19 அணியில் விளையாடியுள்ளார். ஈஸ்டர்ன் பிராவின்ஸ் அணிக்காக விளையாடிய சோலோ, லீக் கிரிக்கெட்டில் வாரியஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.