இரு அணிகளும் உலக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்: நியூசிலாந்து அணிக்காக வருத்தப்படும் கம்பீர்

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை அளிக்க நாம் தவறிவிட்டோம் என்று கூறியுள்ளார்
இரு அணிகளும் உலக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்: நியூசிலாந்து அணிக்காக வருத்தப்படும் கம்பீர்

கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணியை அதிக பவுண்டரிகள் அடித்ததன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது.

இதுபற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து என இரு அணிகளுமே வெற்றியாளர்களாக, உலக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து மட்டும் சாம்பியனாக அறிவிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாக விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி. கடந்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்கள். எல்லாச் சூழல்களிலும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடுகிறார்கள். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை அளிக்க நாம் தவறிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூசிலாந்து.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து, தனது அணியை நன்கு வழிநடத்தி 2-ம் இடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com