பாகிஸ்தான் அணியின் வாட்சப் குழுவிலிருந்து முகமது அமிர், ஹசன் அலி ஆகிய இரு பிரபல வீரர்களும் வெளியேறியுள்ளார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்களுக்காக வாட்சப் குழு ஒன்றைத் தொடங்கி அதில் அனைத்து வீரர்களையும் இணைத்துள்ளது. வாரியத்தின் உடற்தகுதி தொடர்பான தகவல்களுக்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. ஜூலை 1 முதல் இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர்களான ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமிர் ஆகிய மூன்று வீரர்களுக்கும் புதிய ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ஒப்பந்தத்தில் இடம்பெறாவிட்டாலும் பாகிஸ்தான் அணியில் மூவரும் தேர்வாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் வாட்சப் குழுவிலிருந்து முகமது அமிர், ஹசன் அலி ஆகிய இருவரும் விலகியுள்ளார்கள். எனினும் ஒப்பந்தம் மறுக்கப்பட்ட வஹாப் ரியாஸ் குழுவில் தொடர்ந்து நீடிக்கிறார்.