ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இது சரியான நேரம் என பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் கடந்த மாதம் தெரிவித்தார். இதற்கு முன்னணி வீராங்கனை ஜோஹன்னா கொன்டா ஆதரவு அளித்துள்ளார்.
ஆடவர் டென்னிஸுக்காக ஏடிபி என்கிற அமைப்பும் மகளிர் டென்னிஸுக்காக டபிள்யூடிஏ என்கிற அமைப்பும் தனித்தனியாக இயங்குகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளின் கூட்டணி பற்றி ஃபெடரர் கூறியதாவது: ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இதுவே சரியான நேரம் என நான் மட்டும்தான் எண்ணுகிறேனா? களத்தில் ஆடவரும் மகளிரும் ஒன்றாக இணைந்து போட்டியிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இரு சங்கங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறுகிறேன். இரு விதமான தரவரிசை மதிப்பீடுகள், வெவ்வேறு லோகோக்கள், தனித்தனி இணையத்தளங்கள், தனித்தனி போட்டிகள் என இருப்பது ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஃபெடரரின் இந்தக் கோரிக்கைக்கு வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். முன்னணி வீராங்கனையும் தரவரிசையில் உலகளவில் 14-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த 29 வயது ஜோஹன்னா கொன்டா, ஃபெடரரின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இரு சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஃபெடரரைப் போன்ற பிரபல வீரர் ஒருவர் பேசும்போது அதற்குக் கூடுதல் கவனம் கிடைக்கிறது.
நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது இது சரியான யோசனை தான். ஆனால் இது நடக்கக்கூடாது எனப் பலர் விரும்புவார்கள். அதேபோல இதற்கு ஆதரவாகவும் பலர் உள்ளார்கள் என்றார்.