விராட் கோலியை விடவும் சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சச்சின் காலத்தில் ஒரு வெள்ளைப் பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஒருநாள் விதிமுறைகள் வேறாக இருந்தன. எனவே கோலியை விடவும் சச்சினையே சிறந்த பேட்ஸ்மேனாகக் கூறுவேன். இப்படிச் சொல்வது கடினமானது. ஏனெனில் விராட் கோலி பிரமாதமாக விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக உள்ளன.
இரு புதிய பந்துகள், ரிவர்ஸ் ஸ்விங் கிடையாது, ஆஃப் ஸ்பின்னர்களுக்குச் சாதகமான சூழல் இல்லை, வட்டத்துக்குள் 5 வீரர்கள் என பேட்டிங் செய்ய சுலபமான வழிகள் இன்றைய தலைமுறை வீரர்களுக்கு உள்ளது.
சச்சின் விளையாடிய காலத்தை எண்ணிப் பாருங்கள். வெவ்வேறு விதிமுறைகள் இருந்தன. 230, 240 ரன்கள் தான் வெற்றி இலக்காக இருந்தது. நீண்ட நாள் விளையாடியதற்காகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் நிலவிய விதிமுறைகளுக்காகவும் சச்சினையே தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.