சமையல் எரிவாயு உருளையைக் கொண்டு உடற்பயிற்சி செய்வதாக இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் கூறியுள்ளார்.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி முதல்முறையாக கோப்பையை வென்றது/
இந்தப் போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சிறப்பாகப் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு பிஷ்னாயைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு ரவி பிஷ்னாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பொது முடக்கம் காரணமாக, தொலைக்காட்சி வழியாக பழைய உலகக் கோப்பை, ஐபிஎல் ஆட்டங்களைப் பார்த்து வருகிறேன். பாதுகாப்பான சூழல் உருவான பிறகு வெளியே சென்று பந்துவீச ஆவலாக உள்ளேன். பிகானரில் உள்ள வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இணையம் வழியாக உடற்தகுதி வகுப்புகளில் பங்கேற்கிறேன். பிசிசிஐ அமைப்பால் நியமிக்கப்பட்டுள்ள உடற்தகுதிப் பயிற்சியாளர் ஆனந்த் டேட், நாங்கள் செய்யவேண்டிய பயிற்சிகள் தொடர்பாக யோசனைகளைக் கூறி வருகிறார்.
உடற்பயிற்சி செய்ய எல்லோருக்கும் வீட்டில் இடமோ உடற்பயிற்சி உபகரணங்களோ இருப்பதில்லை. எனவே எடைத் தூக்கும் பயிற்சிகள் சவாலாக உள்ளன. பெரிய கற்களையும் சமையல் எரிவாயு உருளையும் கொண்டு எடைத் தூக்கும் பயிற்சியை மேற்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.