பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தனிமையில் இருக்கவுள்ளார்.
மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பெங்கால் டி20 சேலஞ்ச் தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.
இதுபற்றி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலர் தேபபிரதா தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் தற்போது தனிமையில் உள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்."