இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்-ரௌண்டர் ஹார்திக் பாண்டியா ஒரு ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பந்துவீசினார்.
ஹார்திக் பாண்டியாவுக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர்களில் அவர் விளையாடவில்லை. இதன்பிறகு, நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் அவர் பேட்டிங் மட்டுமே செய்தார், பந்துவீசவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாடியது. 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் திணறிய இந்திய அணி 374 ரன்களை வாரி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அதே பிரச்னைதான். 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் திணறியது. அதுமட்டுமில்லாமல், நவ்தீப் சைனி ஓவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறடித்தனர். இதனால், 6-வது பந்துவீச்சாளரின் கட்டாயம் ஏற்பட்டது.
மயங்க் அகர்வாலைப் பயன்படுத்தினார் விராட் கோலி. அந்த ஓவரிலும் பெரிதளவில் ரன்களை அடித்ததால், வேறு வழியின்றி பாண்டியா பந்துவீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக இன்று பந்துவீசினார்.
இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய பாண்டியா 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார்.