3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே சோ்த்தது. நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் சோ்த்தாா். 46 பந்துகளில் சதமடித்த பிலிப்ஸ், டி20 போட்டியில் விரைவாக சதமடித்த நியூஸிலாந்து வீரா் என்ற பெருமையை பெற்றாா். இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2 ஆட்டங்களில் வென்று தொடரைத் தன் வசமாக்கியது நியூசிலாந்து அணி.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டம் மழையால் ரத்தானது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 3-வது டி20 ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் செயல்பட்டார்.
இதையடுத்து டி20 தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. ஃபெர்குசன் தொடர் நாயகனாகத் தேர்வானார்.
இரு அணிகளும் இரு டெஸ்டுகளில் அடுத்து விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 3 அன்று தொடங்கி டிசம்பர் 15-ல் நிறைவு பெறுகிறது.