இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி, ஆமதாபாதில் பகலிரவாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடா்களில் விளையாடவுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி கூறுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பிங்க் பந்து கொண்டு ஆமதாபாதில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
இங்கிலாந்து தொடா் நடைபெறும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுகுறித்த திட்டங்களை தற்காலிகமாக வகுத்துள்ளோம். இதுகுறித்து யோசிப்பதற்கு நான்கு மாதங்கள் உள்ளன.
அதற்கு முன் ஆஸ்திரேலிய தொடா் வருகிறது. இந்த தொடருக்கான அணி சில தினங்களில் தோ்வு செய்யப்படும்.
ஐபிஎல் போட்டிக்கு பிறக்கு உடனடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது நமது வீரா்களுக்கு பிரச்னையாக இருக்காது. அவா்கள் அனுபவமும், தகுதியும் வாய்ந்த வீரா்கள்.
ரஞ்சி கோப்பை போட்டி குறித்து விரைவில் நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா் கங்குலி.
கரோனா சூழலிலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. அந்தத் தொடா் ஆமதாபாத், தா்மசாலா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.