நெஞ்சு வலி காரணமாக அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த கபில் தேவ்

உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நெஞ்சு வலி காரணமாக அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த கபில் தேவ்

இந்திய முன்னாள் வீரர் கபில் தேவ் நெஞ்சு வலி காரணமாக தில்லி தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

61 வயது கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார். 

இந்நிலையில் கபில் தேவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தில்லி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கபில் தேவ் ஓரளவு நலமுடன் உள்ளார். அவருடைய மனைவி ரோமியுடன் பேசினேன். கபில் தேவ் நேற்று சிறிது உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார். இன்று மருத்துவமனையில் அவருக்குப் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என முன்னாள் டெஸ்ட் வீரரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தின் தலைவருமான அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று விராட் கோலி, அனில் கும்ப்ளே, கெளதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளார்கள்.

கபில் தேவின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது: அதிகாலை 1 மணிக்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற கபில் தேவ் வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. சில நாள்களில் கபில் தேவ் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com