கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 13 பேரைத் தவிர அனைத்து சிஎஸ்கே வீரர்கள், உறுப்பினர்களும் இன்று முதல் பயிற்சியில் பங்கேற்கவுள்ளார்கள்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணியில், 13 பேருக்கு கரோனா உறுதியானதால் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மற்ற அணிகள் போல கரோனாவால் சிஎஸ்கே அணியும் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஆகஸ்ட் 28 அன்றே பயிற்சியை ஆரம்பித்திருக்கும்.
இந்நிலையில் 3-வது பரிசோதனையிலும் 13 பேரைத் தவிர இதர சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபற்றி சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
சிஎஸ்கே அணியின் பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது. மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் 13 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சஹார், ருதுராஜ் உள்ளிட்ட 13 பேருக்கும் அடுத்த வார இறுதியில் இரு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அப்போதுதான் அவர்களுடைய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைகிறது. இதில் கரோனா இல்லை என்பது உறுதியானால் 13 பேரும் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.