பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆண்ட்ரீஸ்கு, அதன்பிறகு முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகியுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். எனது உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்காக இந்த சீசன் முழுவதும் எந்தப் போட்டியிலும் விளையாடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 27-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்குகிறது.