இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்தவே முயற்சி செய்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய மைதானங்களில் நடத்தவே முயற்சி செய்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, ஷார்ஜா, துபை என மூன்று மைதானங்கள் இருப்பது சாதகமானது. மும்பையிலும் வான்கடே, சிசிஐ பிரபோர்ன், டிஒய் படேல் என மூன்று மைதானங்கள் உள்ளன. ஈடன் கார்டன்ஸ் மைதானமும் உள்ளது.
கரோனா பாதுகாப்பு வளையத்தை நாம் உருவாக்க வேண்டும். நம் இதயம் உள்ள இந்தியாவில் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நடத்த விரும்புகிறோம். கரோனா நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றார்.