அதிரடி ஆட்டக்காரர் அல்ல என்றாலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரிடமிருந்து கற்றுக்கொள்வேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற சேத்தேஷ்வர் புஜாரா வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்குகிறார். இந்த நிலையில் ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவுக்கு புஜாரா பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்தது:
"ஸ்டிரைக் ரேட் என்று வந்துவிட்டால் நான் அதிரடி ஆட்டக்காரர் அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதேநேரம் விராட் கோலி போன்ற ஆட்டக்காரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். ரோஹித் சர்மா அதிரடி ஆட்டக்காரர் அல்ல. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த டைமிங்கில் விளையாடுபவர்களில் அவர் ஒருவர்.
கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களிடமிருந்த கற்றுக்கொள்ளலாம். ஸ்டீவ் ஸ்மித்திடமிருந்துகூட கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட் ஷாட்களை ஆடியும், புதுமையான முறையில் விளையாடியுமே இவர்கள் அனைவரும் ரன்களைக் குவிக்கின்றனர்.
என்னிடமும் அதே மனநிலைதான் இருக்கிறது. வெற்றியைட வேண்டும், புதுமையாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் கிரிக்கெட் ஷாட்களை ஆடியே ரன் குவிக்க வேண்டும். அதிரடி ஆட்டத்துக்குத் தேவையான வலிமை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், கிரிக்கெட்டுக்குத் தேவையான அறிவுதான் முக்கியப் பலமாக இருக்க வேண்டும் என்பதையும் நான் மறுக்க மாட்டேன்.
நான் கடந்த காலங்களில் டி20 கிரிக்கெட் விளையாடும்போது, என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இதனால் பாதிக்கப்படுமா என்கிற கவலை இருந்தது. ஐபிஎல் முடிந்தவுடன் தொழில்முறை தவறுகள் ஏற்படலாம். ஆனால், தற்போது அதைக் கடந்துவிட்டேன். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இதுதான் என்னுடைய இயல்பான ஆட்டம், இதுதான் எனது பலம் என்பதை உணர்ந்துகொண்டேன். இது ஒருபோதும் என்னைவிட்டு போகாது.
இந்த அறிவுரையை முன்பு ஒருமுறை ராகுல் டிராவிட்டிடமிருந்து பெற்றேன். பல்வேறு விதமான ஷாட்களை ஆடுவதன் மூலம் உன்னுடைய இயல்பான ஆட்டம் மாறிவிடாது என்று அறிவுரை கூறினார்."