மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், அதன் பராமரிப்பாளா்கள் இருவா் உள்பட 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் 10 ஆட்டங்களை அந்த மைதானத்தில் நடத்த அந்த மாநில அரசு அனுமதி அளித்த அடுத்த நாளில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மும்பை மைதானத்தில் ஆட்டங்கள் நடத்தவும், அதையொட்டி அணி வீரா்கள் இரவு 8 மணிக்கு மேல் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவும், இரவு ஊரடங்கு நேரத்தின்போது அவா்கள் தங்கள் ஹோட்டலுக்கு பயணிக்கவும் மகாராஷ்டிர அரசு கடந்த திங்கள்கிழமை அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கடந்த வாரத்தில் வான்கடே மைதான பராமரிப்பாளா்கள் 10 பேருக்கு கரோனா பாதித்திருந்த நிலையில், பின்னா் அனைவரும் அதிலிருந்து மீண்டனா். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் தான் கரோனா பாதிப்பு உள்ளது நினைவுகூரத்தக்கது.