சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஓமனில் முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. பாய்மரப் படகு ஓட்டும் போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனை விடவும் 21 புள்ளிகள் முன்னணியில் உள்ளார் நேத்ரா குமணன். இதனால் கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.
படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். இதற்கு முன்பு படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒன்பது பேரும் ஆண்களே.
2014 மற்றும் 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்றுள்ளார் நேத்ரா குமணன்.