விவோ நிறுவனத்தின் விளம்பரதாரராக இந்திய கேப்டன் விராட் கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்தது.
2015-ல் இரு வருடங்களுக்கு ஐபிஎல் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டது சீன நிறுவனமான விவோ. 2017-ல் ஒப்பந்தத்தை ஐந்து வருடங்களுக்குத் தக்கவைத்துக்கொண்டது. கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் காரணமாக ஐபிஎல் விளம்பரதாரராக விவோ தொடர்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன. பிறகு, டிரீம் 11 நிறுவனம் ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வு செய்யப்பட்டது.
எனினும் இந்த வருட ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ மீண்டும் தொடர்கிறது.
இந்நிலையில் விவோ நிறுவனத்தின் விளம்பரதாரராக இந்திய கேப்டன் விராட் கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விவோ நிறுவனத்தின் புதிய மொபைல் போன்களின் விளம்பரத்திலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர நடவடிக்கைகளிலும் விராட் கோலி ஈடுபடவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஆமீர் கான், நடிகை சாரா அலி கான் ஆகியோரும் விவோ நிறுவனத்தின் விளம்பரதாரராகச் செயல்படுகிறார்கள்.