பாகிஸ்தானில் தோனி மீது ராகுல் டிராவிட் கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பற்றி பேசியுள்ளார் முன்னாள் வீரர் சேவாக்.
ராகுல் டிராவிட் நடித்த ஒரு விளம்பரம் சமீபத்தில் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அதில் தனது கோபத்தை வெளிப்படுத்துவதுபோல நடித்து ஆச்சர்யப்படுத்தியிருந்தார். இதையடுத்து ராகுல் டிராவிட் இதற்கு முன்பு கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் சேவாக் கூறியதாவது:
ராகுல் டிராவிட் கோபமாக இருந்ததை நான் பார்த்துள்ளேன். நாங்கள் பாகிஸ்தானில் இருந்தபோது, அணிக்குப் புதிதாக வந்த தோனி ஒரு ஷாட் அடித்து பாயிண்ட் பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இதனால் தோனி மீது கோபமாக இருந்தார் டிராவிட். இப்படித்தான் நீ விளையாடுவியா? ஆட்டத்தின் கடைசி வரைக்கும் விளையாடி முடித்திருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கோபமாகப் பேசிய டிராவிடைப் பார்த்து நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் சொன்னதில் பாதி எனக்குப் புரியவில்லை.
அடுத்தமுறை தோனி விளையாடியபோது அவர் அதிரடியாக ஆட முயலவில்லை. என்ன ஆச்சு என்று அவரிடம் சென்று கேட்டேன். ராகுல் டிராவிடிடம் என்னால் மீண்டும் திட்டு வாங்க முடியாது. ஆட்டத்தை அமைதியாக முடித்துக்கொண்டு ஓய்வறைக்குத் திரும்பப் போகிறேன் என்றார் தோனி என சேவாக் கூறியுள்ளார்.