ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது.
14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால் இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். பட்லர் 8 ரன்களிலும், வோரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சனும் நிலைத்து ஆடவில்லை. அவர் 21 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் வந்த துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் உயர உதவினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் ராகுல் திவாதியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் குவித்தது.