விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்திய வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது, தேசிய விளையாட்டுத் தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த விருது இனிமேல், மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மின்னல் வேக வீரன் உசைன் போல்ட்டை மறக்க முடியுமா?
கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற இந்தியா முழுக்க இருந்து ஏராளமான கோரிக்கைகள் எனக்கு வந்தன. அவர்களுடைய கருத்தை மதிக்கும் விதத்தில் கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்று ட்விட்டரில் மோடி கூறியுள்ளார்.
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926 முதல் 1949 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்தார். இவர் பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாட்டப்படுகிறது.