இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 278 ரன்கள் எடுத்தது.
95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 24 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
ரூட் 54 ரன்களுடனும், சிப்லே 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிக்க | ஜோ ரூட் அரைசதம்: 2-வது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிப்லே 28 ரன்களுக்கு ஜாஸ்பிரீத் பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் துரிதமாக விளையாடி 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேன் லாரன்ஸும் துரிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவர் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதன்பிறகு, ஜோ ரூட்டுடன் ஜாஸ் பட்லர் இணைந்தார். இவரும் சற்று துரிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால், அந்த அணியின் முன்னிலை 100-ஐத் தாண்டியுள்ளது.
4-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
ரூட் 96 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.