இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில், 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்க்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோ்த்தாா். 2-வது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. ரூட் 48, பேர்ஸ்டோவ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
3-ம் நாளான இன்று இந்திய அணியின் பந்துவீச்சை ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் திணறடித்தார்கள். பலவழிகளில் முயன்றும் இந்திய அணிக்கு விக்கெட் விழவில்லை. ஜம்மென்று 97 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. 82 பந்துகளில் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவ் 90 பந்துகளிலும் அரை சதங்களைப் பூர்த்தி செய்தார்கள்.
3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 73 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 89, பேர்ஸ்டோவ் 51 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னும் ஏழு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 148 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இன்று மாலையில் இங்கிலாந்து அணி, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.