லார்ட்ஸ் டெஸ்டில் 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களை முதலிரண்டு ஓவர்களிலேயே வீழ்த்தி இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 259 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதனால், உணவு இடைவேளை முடிந்தபிறகு இங்கிலாந்தை பேட்டிங் செய்ய இந்திய அணி அழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி, பும்ராவே களமிறங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 9 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் கிடைத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். முதல் ஓவரை ஜாஸ்பிரீத் பும்ரா வீசினார். 3 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்த பர்ன்ஸ் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீசினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சிப்லியும் முதல் 3 பந்துகளை மட்டுமே தாக்குப்பிடித்து 4-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி நாள் ஆட்டத்தில் குறைந்தபட்சம் 60 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டவுள்ள நிலையில், முதலிரண்டு ஓவர்களிலேயே இருவரும் விக்கட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்துள்ளனர்.