இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டிசம்பர் 26 அன்று தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டிசம்பர் 26 அன்று தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17-ல் தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 8 அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்வதாகவும் திட்டமிடப்பட்டது.

இங்கிலாந்தில் கரோனா பயம் காரணமாக இந்திய அணி 5-வது டெஸ்டில் பங்கேற்க மறுத்தது. கடந்த வருடம் தென்னாப்பிரிக்க அணியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பியது. ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மறுத்தது. இந்தச் சூழலில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி தெ.ஆ. - இந்தியா தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. 

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டு, வேறு தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, டெஸ்ட் தொடர் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐயின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்று தொடங்கும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com