தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா முகமது ஷமி வேகத்தில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க | ஷமி 5 விக்கெட்டுகள்: 197 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது
இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
அகர்வால் ஒரேயொரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் மார்கோ ஜான்சென் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, நைட் வாட்ச்மேனாக ஷர்துல் தாக்குர் களமிறக்கப்பட்டார். ஆட்டம் முடியும் வரை ராகுலும், தாக்குரும் ஆட்டமிழக்காமல் விக்கெட்டை பாதுகாத்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.