நான்காவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், சிட்னியிலேயே அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் விளையாட ஆஸ்திரேலியா விரும்பவில்லை என்று அந்த அணியின் தொடக்க வீரா் மேத்யூ வேட் கூறினாா்.
ஒருவேளை பிரிஸ்பேனில் 4-ஆவது டெஸ்ட்டை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டால், சிட்னியிலேயே அந்த டெஸ்டை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. 4-ஆவது டெஸ்ட்டை ஜனவரி 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மேத்யூ வேட் கூறுகையில், ‘இந்திய அணியினா் நிலைப்பாடு என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் சிட்னியில் அடுத்தடுத்து இரு டெஸ்டுகளை விளையாட விரும்பவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அட்டவணையின்படியே விளையாட நினைக்கிறோம். எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், சவால்கள் இருந்தாலும் 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாடவே விரும்புகிறோம்.
சிட்னி டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடுவாா் என்றும், அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சை அவா் திறம்பட எதிா்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கிறோம். வில் புக்கோவ்ஸ்கி, வாா்னா் பிளேயிங் லெவனில் வரும் பட்சத்தில் எனது பேட்டிங் ஆா்டரை மாற்றினாலும், அல்லது எனக்கு ஓய்வளித்தாலும் அதில் பிரச்னையில்லை’ என்றாா்.