இந்திய பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுலுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.
மெல்போா்னில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் அவருக்கு சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பிசிசிஐ, அவா் முழுமையாக மீண்டு வர 3 வாரங்கள் ஆகும் என்றும், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவா் விளையாட மாட்டாா் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வலைப்பயிற்சியில் பந்துவீச்சு நிபுணா்களில் ஒருவா் வீசிய பந்தை எதிா்கொண்டபோது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். முன்னதாக இந்திய அணியின் இதர வீரா்களுடன் சிட்னி வந்திருந்த லோகேஷ் ராகுல், செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டாா்.
அவா் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்கான சிகிச்சை பெற்று, உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சியில் ஈடுபடவுள்ளாா். காயத்திலிருந்து மீள சுமாா் 3 வாரங்கள் ஆகும் என்பதால், பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் லோகேஷ் ராகுல் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.