இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு சிட்னி டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என ஆஸி. கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று டெஸ்டுகளிலும் இந்திய அணி ஒரு நாள் முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் இந்தமுறை வழக்கத்தை மாற்றியுள்ளது. இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. இத்தகவலை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியுள்ளார். இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடருக்கு முன்பே காயம் காரணமாக விலகியுள்ளார். அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார். 3-வது டெஸ்டில் விளையாடும்போது அஸ்வின், பும்ரா, விஹாரி ஆகிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் முழு உடற்தகுதியை அடைய சிகிச்சை பெற்று வருகிறார்கள். பயிற்சியின்போது மயங்க் அகர்வாலுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தால் அவதிப்படும் வீரர்களுக்கு நாளை காலை உடற்தகுதி பரிசோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.