மும்பைக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 ஆட்டத்தில் கேரள அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேரள தொடக்க வீரர் அசாருதீன் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. ஜெயிஸ்வால் 40 ரன்களும் ஆதித்ய தாரே 42 ரன்களும் எடுத்தார்கள். ஜலஜ் சக்ஸேனா, ஆசிஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
கேரள அணியின் தொடக்க வீரர் அசாருதீன், அதிரடியாக விளையாடி மும்பை பந்துவீச்சைத் திணறடித்தார். பவர்பிளேயில் கேரள அணி, 6 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தது. 20 பந்துகளில் அரை சதம் எடுத்தார் அசாருதீன். இதன்பிறகு சிக்ஸர் மழை பொழிந்து 37 பந்துகளில் சதமடித்தார். இதனால் கடினமான இலக்கை 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது கேரள அணி. அசாருதீன் 54 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் இது 2-வது அதிவேக சதமாகும். இதற்கு முன்பு 2018-ல் ரிஷப் பந்த், 32 பந்துகளில் ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிராக சதமடித்தார்.
இந்திய உள்ளூர் போட்டிகளில் இதுவரை எந்தவொரு ஆட்டத்திலும் மும்பையை கேரள அணி ஜெயித்ததில்லை. அசாருதீனின் மறக்க முடியாத ஆட்டதால் கேரள அணி மும்பைக்கு எதிராக முதல்முறையாக வெற்றி கண்டது. ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிற நேரத்தில் அசாருதீனைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.