ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நீண்ட விவாதத்துக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இளம் வீரர்களைக் கேப்டன்களாக நியமிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் திகழ்ந்துள்ளனர்.
இதே பாணியில் தற்போது இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் 14 ஆட்டங்களில் விளையாடி 375 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், அவருடைய பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 158 ஆக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் சீசன்களில் இதுவே அவரது அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்.