ஆஸ்திரேலியாவிலிருந்து சின்னப்பம்பட்டிக்குத் திரும்பினார் நடராஜன்: மக்கள் உற்சாக வரவேற்பு

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நடராஜன் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்...
ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி வாகை சூடி கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டி வியாழக்கிழமை வருகை புரிந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை சரக்கு வண்டியில் வரவேற்கும் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள்.
ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி வாகை சூடி கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டி வியாழக்கிழமை வருகை புரிந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை சரக்கு வண்டியில் வரவேற்கும் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றியுடன் சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பினார் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி 4-வது மற்றும் கடைசி டெஸ்டை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலியா தொடரை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சேலம் மாவட்ட சின்னப்பம்பட்டி வியாழக்கிழமை வந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆரத்தி எடுக்கும் நடராஜனின் தாயார் சாந்தா.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். 

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். 

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார்.  இதன்பிறகு மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஒரு ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும் மூன்று டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்ற பாண்டியா, நடராஜன் இவ்விருதுக்குத் தகுதியானவர் என்று கூறி பாராட்டினார். 

நண்பர்களால் அமைக்கப்பட்டுள்ள நடராஜன் உருவம்  பதித்த பேனர்
நண்பர்களால் அமைக்கப்பட்டுள்ள நடராஜன் உருவம்  பதித்த பேனர்

மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். இதனால் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த நடராஜன், இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார். சிட்னி டெஸ்டில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவர்கள் இடம்பெறவில்லை. இதனால் 4-வது டெஸ்டில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அவருடன் இணைந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை நடராஜன் பெற்றார். 

ஐபிஎல் போட்டியின் போது நடராஜனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு நேராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் நடராஜன். இதனால் தனது குழந்தையை அவரால் உடனடியாகப் பார்க்க முடியாமல் போனது. இந்தத் தியாகத்துக்குக் கிடைத்த பரிசாக ஆஸ்திரேலியாவில் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ள இந்திய அணி இன்று நாடு திரும்பியுள்ளது. பிரிஸ்பேனிலிருந்து ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், பிரித்வ் ஷா போன்றோர் மும்பைக்குச் சென்றார்கள். அங்கு, மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வீரர்களை வரவேற்றார்கள். பிரிஸ்பேனில் அசத்திய ரிஷப் பந்த், தில்லிக்குச் சென்றார். பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்துக்கு வந்துள்ளார்.

சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பாராட்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட பந்தல்களைக் காவல்துறையினர் இன்று அகற்றினார்கள்.

கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து நடராஜன் வந்துள்ளதால் கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது, குடும்ப உறுப்பினர்கள் தவிர வெளிநபர்களைச் சந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடராஜனின் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு வரவேற்கத் தயாராக இருக்கும் உறவினர்கள்
நடராஜனின் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு வரவேற்கத் தயாராக இருக்கும் உறவினர்கள்

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் சேலம் சின்னப்பம்பட்டிக்கு வந்து சேர்ந்தார் நடராஜன். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் சின்னப்பம்பட்டியில் திரண்டார்கள். இதனால் ஊர் மக்கள் மிகவும் உற்சாகமானார்கள். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நடராஜன் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். முகக்கவசமும் கையுறையும் நடராஜன் அணிந்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com