இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சென்னைக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன.
முதல் இரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணியினர் இலங்கையிலிருந்து நேராக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கியுள்ளார்கள். இதுதொடர்பான விடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. சென்னையிலுள்ள லீலா பேலஸில் இரு அணி வீரர்களும் தங்குகிறார்கள். ஆறு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.