பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு வியாழக்கிழமை மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு வியாழக்கிழமை மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலிக்கு புதன்கிழமை தலைச்சுற்றலுடன் நெஞ்சுப் பகுதியில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தா அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரிடம் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு வியாழக்கிழமை மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய மேலும் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன. சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்தன.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் அசோக் பட்டாச்சாா்யா ஆகியோா் மருத்துவமனை சென்று செளரவ் கங்குலியிடம் நலம் விசாரித்தனா்.

ஏற்கெனவே இம்மாதத் தொடக்கத்தில் செளரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவரின் 3 இதயத் தமனிகளில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதயத் தமனி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com