இலங்கையுடனான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ள இங்கிலாந்து, மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்கார் ஜேசன் ராய் மற்றும் டாம் கரன் ஆகியோர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் கிறிஸ் வோக்ஸுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையில், மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு அவிஷ்கா பெர்னான்டோ, தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் அசிதா பெர்னான்டோ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்டமும் இலங்கைக்கு சாதகமான ஆட்டமாக அமையவில்லை. 2-வது ஓவரின் 2-வது பந்தில் கேப்டன் குசால் பெரேரா விக்கெட்டை சாம் கரன் வீழ்த்தி அசத்தினார். அதேஓவரில் அவிஷ்கா பெர்னான்டோ (2), அடுத்த ஓவரில் நிஸ்ஸன்கா (5) ஆகியோரையும் சாம் கரன் வீழ்த்த இலங்கை அணி 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் டேவிட் வில்லியும் சரித் அசலங்கா விக்கெட்டை வீழ்த்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து இலங்கை திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.