ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு செவ்வாய்க்கிழமை தரவரிசை புதுப்பிக்கப்பட்டது. இதில் பெரிய ஸ்கோரை குவிக்காத காரணத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 30 புள்ளிகளை இழந்து முதலிடத்தை இழந்தார்.
இதன்மூலம், மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதன்முதலாக 16 ஆண்டுகளுக்கு முன்பு மிதாலி ராஜ் முதலிடம் பிடித்தார். இவர் முதலிடம் பிடிப்பது தற்போது 9-வது முறை.
மிதாலி ராஜ் தவிர்த்து இந்திய அணியிலிருந்து ஸ்மிருதி மந்தானா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். 701 புள்ளிகளுடன் அவர் 9-வது இடத்தில் இருக்கிறார்.