இந்தியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 262/9 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 263/3 ரன்களை எடுத்து வென்றது. கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் இசுரு உடானாவுக்குப் பதிலாக கசுன் ரஜிதா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை.
வழக்கம்போல இந்தமுறையும் முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். இலங்கை அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது. ஆனால் மினோத் பனுகா 36 ரன்களில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பனுகா முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சஹால்.
70 பந்துகளில் அரை சதமெடுத்த அவிஷ்கா, புவனேஸ்வர் பந்துவீச்சில் கிருனால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த தனஞ்ஜெயா டி சில்வா, சஹார் பந்துவீச்சில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. சரித் 19, தசுன் ஷனகா 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.