கிரிக்கெட்டில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை இலங்கை மறந்துவிட்டதாக அந்த நாட்டு ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் விமரிசித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவிடம் அவர் பேசியது:
"நான் முன்பே கூறியிருக்கிறேன். இலங்கைக்கு வெற்றி பெறுவதற்கான வழிகள் தெரியவில்லை. கடந்த பல வருடங்களாக வெற்றிக்கான பாதைகளை இலங்கை மறந்துவிட்டது. ஆட்டத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாததால் வெற்றி பெறுவது அவர்களுக்குக் கடினம்.
முதல் 10-15 ஓவர்களில் இலங்கை 3 விக்கெட்டுகளை வீழத்தினால் இந்தியா திணறும் என நான் முன்பே கூறியிருக்கிறேன். அதேபோல் இந்திய அணி திணறியது. தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் வெற்றி பெறச் செய்தது மிகப் பெரிய முயற்சி.
இலங்கையும் சில தவறுகளைச் செய்தது. அவர்கள் வனிந்து ஹசரங்காவை முன்பே பயன்படுத்தியிருக்க வேண்டும். பின்னர் பயன்படுத்துவதற்காக வைத்திருப்பதற்குப் பதில் முன்பே பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்திருக்க வேண்டும். புவனேஷ்வர் குமார் அல்லது சஹார் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் இலக்கை அடைய டெயிலண்டர்களுடன் 8, 9 ஓவர்கள் ஆடுவது கடினமானதாகியிருக்கும். அவர்கள் சில தவறுகளைச் செய்தார்கள். ஆனால், அனுபவமற்ற அணி."
இந்தியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்தது.