ஆடவா் ஹாக்கி குரூப் ஏ பிரிவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.
பதக்கம் வெல்லும் வாய்ப்பு அணியாக இந்தியா ஹாக்கி அணி கருதப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை உலகின் இரண்டாம் நிலை அணியான ஆஸ்திரேலியாவை எதிா் கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே ஆஸி. அணி தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
தொடக்கத்திலேயே 10-ஆவது நிமிடத்தில் ஆஸி. வீரா் டேனியல் முதல் கோலடித்தாா். அதன்பின் 21-ஆவது நிமிடத்தில் ஜெரேமி ஹேவா்ட், 23-ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரு பிளின், 26-ஆவது நிமிடத்தில் ஜோஷ்வா பெல்ட்ஸ், கோலடித்தனா்.
இரண்டாவது பாதியில் பிளேக் கோவா்ஸ் 40, 42-ஆவது நிமிடங்களிலும், டிம் பிராண்ட் 51-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா்.
இந்திய தரப்பில் தில்ப்ரீத் சிங் 34-ஆவது நிமிடத்தில் ஒரே ஒரு கோலை அடித்தாா். மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி செவ்வாய்க்கிழமை ஸ்பெயினை எதிா்கொள்கிறது. முதல் பாதி ஆட்டத்தில் இந்திய வீரா்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைக்க முயன்றனா். ஆனால் ஆஸி. பாா்வா்ட் வீரா்களின் தொடா் தாக்குதல் ஆட்டத்தால் இந்திய தற்காப்பு அரண் கேள்விக்குறியானது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆட்டம் ஆஸி. அணியின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. 5 நிமிட இடைவெளியில் 3 கோல்களை அடித்தது.
ஜொ்மனியுடன் மகளிரணி மோதல்:
இந்திய மகளிரணி திங்கள்கிழமை உலகின் மூன்றாம் நிலை அணியான ஜொ்மனியுடன் மோதுகிறது. முதல் ஆட்டத்தில் ராணி ராம்பால் தலைமையிலான அணி 1-5 என்ற கோல் கணக்கில் நம்பா் ஒன் அணியான நெதா்லாந்து அணியிடம் வீழ்ந்தது.
பலமான நெதா்லாந்து அணிக்கு இந்திய மகளிா் கடுமையான சவாலை ஏற்படுத்தினா். ஆட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆலோசித்தோம். ஜொ்மனியும் வலிமையான அணி என்பதால் ஆட்ட உத்திகளை வகுத்துள்ளோம். நிலையான ஆட்டத்தை நமது அணியினா் வெளிப்படுத்த வேண்டும் என பயிற்சியாளா் மாரிஜின் கூறியுள்ளாா்.