உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 இறுதி ஆட்டங்கள் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து சென்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுபற்றி ஸ்போர்ட்ஸ் டாக்கிடம் யுவ்ராஜ் கூறியது:
"இதுபோன்ற சூழலில் 3-இல் 2 சிறந்த ஆட்டங்கள் என்ற நடைமுறை தேவை. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தால், அடுத்த இரண்டு ஆட்டங்களில் மீள முடியும். நியூசிலாந்து ஏற்கெனவே இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும். 8 முதல் 10 பயிற்சி அமர்வுகள் உள்ளன. இருந்தபோதிலும் பயிற்சி ஆட்டத்துக்கு எந்த மாற்றும் இல்லை.
இது சமமான போட்டியாக இருக்கும். இருந்தபோதிலும் நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் அணுகூலம் இருக்கும்" என்றார் அவர்.
முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதுபோன்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.