செளதாம்ப்டன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானதால் இந்திய அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது.
இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டது. விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
சௌதாம்ப்டனில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டாலும் டாஸுக்கு முன்பு அணியில் மாற்றம் செய்துகொள்ளவும் வழியுண்டு. எனினும் இந்திய அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆடுகளத்தின் தன்மை, சூழல் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் எத்தகைய சூழலிலும் ஆடுகளத்திலும் வானிலை மாற்றத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர்களையே தேர்வு செய்துள்ளோம். எனினும் டாஸ் நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. புதிய முடிவு எதுவும் எடுக்கப்படுவதாக இருந்தால் டாஸ் நிகழ்வுக்கு முன்னர் எடுக்கப்படும். இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவரும் நன்கு அனுபவம் கொண்டவர்கள். சிலர் ஏற்கெனவே இறுதி ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள். ஒவ்வொருவரும் சில போட்டிகளையும் சில டெஸ்டுகளையும் வென்றுள்ளார்கள். அனைவரும் நல்ல நிலையில் உள்ளார்கள் என்றார்.