உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் கடைசி நாள் தேநீர் இடைவேளையில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தனர்.
32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டேவன் கான்வே களமிறங்கினர். இந்த இணை தேநீர் இடைவேளை வரை 8 ஓவர்கள் தாக்குப்பிடித்துள்ளது.
லாதம் 5 ரன்களுடனும், கான்வே 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 45 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றிக்கு இன்னும் 120 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவை.