விஜய் ஹசாரே போட்டிக்கான நாக்அவுட் ஆட்டங்கள் அனைத்தும் தில்லியில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஹசாரே போட்டியின் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்த நிலையில் - மும்பை, செளராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத், ஆந்திரம், கர்நாடகா ஆகிய 7 அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு எலைட் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடம் பிடித்த தில்லியும் பிளேட் பிரிவில் முதலிடம் பிடித்த உத்தரகண்ட்டும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, 8-வது அணியாகக் காலிறுதிக்குத் தகுதி பெறும்.
மார்ச் 7 அன்று தில்லி - உத்தரகண்ட் அணிகள் மோதும் ஆட்டங்கள் தில்லியில் நடைபெறுகின்றன. பிறகு நான்கு காலிறுதி, இரு அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று என அனைத்து நாக்அவுட் ஆட்டங்களும் தில்லியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் உள்ள அருண் ஜேட்லி மற்றும் பாலம் விமானப் படை மைதானங்களில் நாக்அவுட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.