டி20 தொடரில் ரோஹித் சர்மா & கே.எல். ராகுல் தொடக்க வீரர்கள்: இந்திய அணி கேப்டன் கோலி அறிவிப்பு

ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார்கள்.
டி20 தொடரில் ரோஹித் சர்மா & கே.எல். ராகுல் தொடக்க வீரர்கள்: இந்திய அணி கேப்டன் கோலி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் நாளை முதல் (மார்ச் 12) தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார்கள். 3-வது தொடக்க வீரராக ஷிகர் தவன் உள்ளார். இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடக்க வீரர்களாக இருப்பார்கள். இந்திய அணியில் அதிரடி வீரர்கள் உள்ளார்கள். இப்படியொரு அணியாக விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தொடரிலிருந்து இயல்பாக விளையாடவுள்ளோம். 

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணி என இந்தியாவைக் கூற முடியாது. இங்கிலாந்தைக் கூறலாம். அவர்கள்தான் உலகின் நெ.1 அணி. அவர்களுடைய பலத்தை அனைத்து அணிகளும் அறிவோம்.

அணியில் அஸ்வினைச் சேர்ப்பது குறித்துக் கேட்கிறீர்கள். வாஷிங்டன் சுந்தர் நன்றாகப் பந்துவீசி வருகிறார். ஒரேமாதிரியான இரு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்வது கடினம். ஒருவேளை, வாஷிங்டன் சுந்தர் மோசமாக விளையாடினால் அது சாத்தியம்.  புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளில் பங்களிக்க அவர் ஆர்வமாக உள்ளார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com