இங்கிலாந்துடனான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகல் மற்றும் இஷன் கிஷன் களமிறங்கினர். ராகுல் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் சாம் கரனிடம் வீழ்ந்தார்.
இதையடுத்து, கிஷனுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இங்கிலாந்து பந்துவீச்சை விளாசியது. இதனால், முதல் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தது.
மறுமுனையிலிருந்து கோலி அளித்த ஊக்கத்தினால் கிஷன் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக அடித்தார். ரஷித் சுழலில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்ததன்மூலம், அறிமுக ஆட்டத்திலேயே அரைசதத்தை எட்டினார் கிஷன். ஆனால், அதே ஓவரில்56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கோலியுடன் ரிஷப் பந்த் இணைந்தார். ரிஷப் பந்தும் வந்த வேகத்தில் அதிரடி காட்டி ரன் வேகத்தை உயர்த்தினார். 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பந்த், ஜோர்டன் வேகத்தில் வீழ்ந்தார்.
இதன்பிறகு, ஆட்டத்தை கோலி தன்வசப்படுத்தினார். ஷ்ரேயஸ் ஐயர் ஸ்டிரைக்கைக் கொடுக்க கோலி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்துக்கொண்டு விளையாடினார்.
டாம் கரன் வேகத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்த கோலி அரைசதத்தை எட்டினார்.
ஜோர்டன் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது.