தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தொடர்ந்து பீல்டிங் செய்யவில்லை. காயம் காரணமாக மீதமுள்ள 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஐபிஎல் 2021 தொடரிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகுவதாக தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன்மூலம், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தில்லி அணியில் அஜின்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின் என கேப்டன் பொறுப்பில் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ள நிலையில் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.