மாற்று வீரராகத் தேர்வானாலும் வாய்ப்பு கிடைத்தால் சவாலுக்குத் தயாராக உள்ளதாக தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு மாற்று தொடக்க வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வாகியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
என்னுடைய தேர்வு குறித்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை உள்ளது. அதுபற்றி நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
இந்திய ஏ அணி வீரராக வெளிநாடுகளில் விளையாடியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடுவதே ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் நான் தயாராக இருப்பேன். நான் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டாலும் வாய்ப்பு கிடைத்தால் என் திறமையை நிரூபிப்பேன். இங்கிலாந்துச் சூழலில் நன்கு விளையாடுவதற்கு உங்களுடைய பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யவேண்டும். பேட்ஸ்மேனுக்கு அச்சூழல் சவாலாக இருக்கும். என் பயிற்சியாளருடன் இணைந்து அதற்காகத் தயாராகி வருகிறேன். பல்வேறு சூழல்களைச் சமாளித்து எப்படி விளையாட வேண்டும் என்பதை ராகுல் டிராவிட் எனக்குக் கற்றுத் தந்துள்ளார் என்றார்.