இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா என நான்கு இந்தியர்கள் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
சுமித் நாகல் இத்தாலியின் ராபர்டோவுக்கு எதிராகவும் பிரஜ்னேஷ் ஜெர்மனியின் ஆஸ்கருக்கு எதிராகவும் ராம்குமார் அமெரிக்காவின் மைக்கேலுக்கு எதிராகவும் அங்கிதா ரெய்னா ஆஸ்திரேலியாவின் அரினாவுக்கு எதிராகவும் மோதவுள்ளார்கள்.
23 வயது சுமித் நாகல் இதுவரை பிரெஞ்சு ஓபன் போட்டியின் முதல் சுற்றில் விளையாடியதில்லை. 2020 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோற்ற பிறகு தகுதிச்சுற்றுப் போட்டியைத் தாண்டி பிரஜ்னேஷ் முன்னேறியதில்லை. 2019-ல் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்றார். ஆனால் ராம்குமாரும் அங்கிதாவும் இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றுக்கும் தகுதிபெற்றதில்லை.
இதனால் இந்த வருடம் நான்கு இந்தியர்களும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் எப்படி விளையாடி முதல் சுற்றுக்கு முன்னேறப் போகிறார்கள் என்பதை இந்திய டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.