ஐபிஎல் இடமாற்றத்துக்கு வானிலைதான் காரணம்: ஜெய் ஷா
ஐபிஎல் 2-ம் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு வானிலைதான் காரணம் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன் 2-ம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெறும் என பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில் ஜெய் ஷா இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:
"செப்டம்பர், அக்டோபரில் இங்கு பருவமழைக் காலம். அப்போது ஐபிஎல் ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல்-ஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தோம்.
டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை ஐசிசியிடம் அவகாசம் கேட்டு பின்னர் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் பாதுகாப்பான இடத்தில் வைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். வரும் நாள்களில் சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐசிசியிடம் அவகாசம் கேட்டு அதற்கேற்ப முடிவு செய்வோம் என்பதை மட்டும்தான் தற்போதைக்கு கூற முடியும்" என்றார் ஷா.