ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2-ம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பேட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான தகவல்:
"குடும்ப காரணங்களுக்காக மேற்கிந்தியத் தீவுகள் பயணத்திலிருந்து டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் தான் மீண்டும் பங்கேற்கப்போவதில்லை என கம்மின்ஸ் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்."
ஐபிஎல் நடப்பு சீசன் மீண்டும் தொடங்கும்பட்சத்தில், அதற்காக இங்கிலாந்து அணியின் திட்டங்களை மாற்ற முடியாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், பேட் கம்மின்ஸும் பங்கேற்கவில்லையெனில் மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை நடத்துவது பிசிசிஐ-க்கு சிக்கலாக அமையும்.
இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.